

சென்னை, ஜூலை – 31
புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களே
நாளைய தொழில்துறை வளர்ச்சியை வழிநடத்தும்” என்று சென்னை வேர்மேட் (WAREMAT ) கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் பி. மதன் ராஜா பேசினார்.
இந்தியாவின் கிடங்கு மேலாண்மை, மெட்டீரியல் ஹேண்ட்லிங், லாஜிஸ்டிக்ஸ், பேக்கேஜிங், தொழில்துறை தானியக்கம் மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகளுக்கான “வேர்மேட், டோபேக், ஆட்டோ ரோபோ காஸ்லாக், டபிள்யூ. எஸ் – ஏ.யூ .டி.எக்ஸ் 2026 என்ற மூன்று நாள் தொழில்துறை கண்காட்சியை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பி. மதன் ராஜா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எஃப்.ஐ. சி.சி ஐ தொழில் கூட்டமைப்பின் இணைத் தலைவர் பூபேஷ் நாகராஜன், டான்ஸ்டியா தலைவர் எஸ். வாசுதேவன், சி.ஐ. தலைவர் டி. தேவகுமார், ஆந்திரா சேம்பர் ஆஃப் காமர்ஸ் துணைத் தலைவர் எஸ். நரசிம்மன், எம்.எஸ் எம்.இ இயக்குநர் தயாளன் உள்ளிட்ட தொழில்துறை முன்னோடிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் பி. மதன் ராஜா பேசுகையில், “தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் எம்.எஸ் எம்.இ நிறுவனங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. ஒரு தொழிற்சாலையின் வெற்றி தரமான தயாரிப்புகளை உருவாக்குவதில் மட்டுமல்ல; கிடங்கு மேலாண்மை, பொருள் கையாளுதல், பேக்கேஜிங் மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மையை நவீன தொழில் நுட்பங்களுடன் ஒருங்கிணைப்பதிலும் உள்ளது. வேர்மேட்
போன்ற கண்காட்சிகள் புதிய தொழில்நுட்பங்களை நேரில் அறிந்து கொள்ளவும், வணிகத் தொடர்புகளை உருவாக்கவும், புதிய சந்தைகளை அடையவும் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன. இத்தகைய தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களே உலகளாவிய போட்டியில் முன்னிலை பெறும். தமிழ்நாட்டின் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும்,” என்றார்.
Midaas Touch Events & Trade Fairs LLP நிறுவனத்தின் இயக்குநர் திரு. டி. விவேகானந்தன் பேசுகையில், “தென்னிந்தியாவின் மிக முக்கிய தொழில்துறை B2B தளமாக WAREMAT தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. தொழில்நுட்ப வழங்குநர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைத்து புதிய வணிக வாய்ப்புகளையும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளையும் உருவாக்குவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்,” என்றார்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 120-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியுள்ளன. B2B வணிக சந்திப்புகள், அறிவுப் பரிமாற்ற அமர்வுகள், நேரடி தொழில்நுட்ப செயல்விளக்கங்கள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. 8,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் இக்கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

