தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சீதாம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அதே ஊரில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி இவரது தம்பி அருகில் பால் பாக்கெட் வாங்க சென்றபோது அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அவரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி திடீரென பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விக்னேஷின் ஹோட்டலுக்குள் புகுந்து அங்கிருந்த அவரது அம்மாவையும் கடையில் உள்ள பொருட்களையும் அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க போன விக்னேஷையும் அந்த நபர்கள் தாக்கியுள்ளனர். அதில் விக்னேஷின் கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இதுபற்றி விக்னேஷ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் கடைக்குள் புகுந்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அந்த நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் விக்னேஷின் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாக போலீசார் கூறியுள்ளதாகவும் விக்னேஷ் தெரிவித்தார். மேலும் அந்த நபர்களால் தனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Uncategorized